Tuesday 8 May 2018

கடவுளுக்கும் வியர்க்குமோ?

சாலையோர மரங்கள் சவக்குழிக்குப் போனபின்
சோலைதேடி அலையும் ஞானப்பழங்கள் நாம் – சிவப்பு
சேலை கட்டியதால் வேம்பும் அரசும் தப்பித்தாலும்
பாலைவனமாகும் இந்தியாவில் பாமரனும் பரமனும் ஒன்றுதான்.
இருவருக்குமே வியர்த்துக் கொட்டுகிறது.
பரமனுக்கு பாஜக இருக்க
பாமரனுக்கு யார் இருக்கிறார்?
பார்வதியின் வியர்வையில் பிறந்த விநாயகருக்கு
வியர்க்கிறது என்று ஏசி வைத்திருக்கிறார்கள்
காவியோடு திரியும் யோகியின் பூமியில்.
கருவறைக்குள் கடவுளைத் தேடாதே – அவர்
கல்லுடைப்பவரின் கறையோடு உழைக்கிறார்
கழனியில் உழைப்பவனின் வியர்வையில் இருக்கிறார்.
தாகூரை எவ்வளவு முட்டாளாக்கிவிட்டோம்?
சிலை அகற்றுமுன் லெனின், அம்பேத்கர், பெரியார்
சித்தாத்தங்களைப் படித்திருக்கலாம்
காவி குர்தாக்களும் காக்கி டவுசர்களும்.
மாடுகளுக்கு ஆம்புலன்சும் ஆதாரும் கொடுத்து - ஏழை
மனிதர்களை விளிம்புக்கு விரட்டிவிட்டு
சாமிகளுக்கு ஏசி போடும் மடச்சாம்பிராணி யோகியின்
மண்டையில் முடிதான் இல்லையென்று நினைத்திருந்தேன்…