Thursday 28 February 2013

செபம் என்பது...




ஒரு செயலல்ல
முணுமுணு மந்திரங்கள் 
மூடிய நம் இதயத்தைத் திறப்பதில்லை
செபம் ஒரு மனநிலை...
தொட்டுக்கொண்டில்லாவிட்டாலும்
தொடர்பில் இருக்கும் உறவு.

ஆண்டவன்முன் அம்மணமாய் 
இழப்பதற்கு ஒன்றுமில்லை என்னைத்தவிர
என்ற மனநிலை.

அது ஒரு உணர்வு,
என்னைவிடப் பெரியவன் என்னோடு இருக்கிறான்
அவன்முன் நான் ஒன்றுமில்லை என்ற விழிப்புணர்வு. 
எனவே ஆணவத்திற்கு வழியில்லை.

அவன் என்னோடு இருப்பதால் 
கவலைகளுக்கும் இடமில்லை
அவன் செயல்கள் நம் வழியாகவும்

நம் செயல்கள் அவன் துணையாகவும்
நடக்க ஆரம்பிக்கின்றன.

இறைமையில் இருக்கிறவனுக்கு
எல்லாமே இறையின் முகம்தான் - இதில்
இழிவானதென்று எதுவுமில்லை.


Monday 11 February 2013

பிழைக்கத் தெரியாதவர்



பரிசேயர்கள் பழித்திருக்க மாட்டார்.
சட்ட அறிஞர்களோடு சண்டை வந்திருக்காது.
ஊரார் உதறித்தள்ளியிருக்க மாட்டார்.
ஊரெல்லாம் சுற்றித்திரியவோ
சாப்பாட்டுக்கு லாட்டரியடிக்கும் நிலையோ
வந்திருக்காது.
குற்றம் கண்டுபிடிக்கவே
குறுகுறுவென கேட்க 
கூட்டமொன்று கிளம்பியிருக்காது.
பைத்தியமாய்த் திரிகிறான் என
சுற்றத்தார் சூனியம் பேசியிருக்கமாட்டார்.
அன்னாவும் கயபாவும் அவரைக் கொன்றுவிட
அதிகாலை கூட்டம் போட தேவையிருந்திருக்காது.
இரத்தமோ இரத்த வியர்வையோ
வடிந்திருக்க வாய்ப்பில்லை.
சங்கிலியால் கட்டியிழுத்து
எள்ளிநகையாடிய வீரர்
முகத்தில் காரித்துப்பியிருக்க மாட்டார்.
கூர்மையான முள்முடியோ
கேவலமான சிலுவைச்சாவோ கிடைத்திருக்காது.
எல்லாமே முடிந்தபிறகு
பிலாத்தும் கைகழுவியிருக்க மாட்டார்

ஒருவேளை இயேசு 
தான் உண்டு தன் வேலை உண்டென இருந்திருந்தால்.

உண்மையை உரக்கக்கூறி 

ஒடுங்கியவரோடும் - சமூகத்தில் 
ஒதுக்கப்பட்டோரோடும் ஒன்றாகப் பழகி
அன்பு செய்ததற்கான பரிசுதான் மேற்சொன்னவை.

என்ன! இயேசு என்ற மாமனிதர் தெரியாமலேயே போயிருப்பார்.