Thursday 19 January 2012

தமிழ்நாடு வாங்கலியோ தமிழ்நாடு





'யாதும் ஊரே யாவருங்கேளிர்' என 
யாவருக்கும் சேதி சொன்ன தமிழன் - இன்று 
நாதியற்று கிடக்கிறான்,
நா வறண்டு கிடக்கிறான்  
ஒரு கை சோத்துக்காக 
வாய் பார்த்துக் காத்திருக்கும் நாய் போல- நிலம்
வாங்கியவர்களின் வாய் பார்க்கிறான் தமிழன். 
நல்லோரெனக் காட்டிக்கொண்ட 
நயவஞ்சக தலைவர்களால் 
தமிழ்நாடு தராசில் வைக்கப்பட்டுவிட்டது.

பாலாறு பாழாகிப்போனது - அங்கே 
பாலும் இல்லை ஆறும் இல்லை.
பாலமே இல்லாமல் பஸ் போகலாம் - 
ஆந்திர தடுப்பணைகளைத் தாண்டி 
தண்ணிர் வரப்போவதில்லை.  

காவிரிப்பெண் மணமாகி 
மறுவீடு புகுந்துவிட்டாள்.
தமிழகம் பக்கம் இனி தலை வைக்கமாட்டாள்.
தண்ணீர் வந்தாலும் தஞ்சாவூரில் வயலில்லை.
வங்கக்கடலின் வாய்க்குள்தான் செல்லும்.

முல்லைப்பெரியாறு ஒரு தொல்லைப்பெரியாறு 
முட்டிப் பார்த்தாலும் முக்கிப்பார்த்தாலும் உடையாது.
ஆராய்ந்து சொன்னாலும் அவன் நம்ப மாட்டான்.
இளகிய மனசுக்காரன் தமிழன்தான் 
இளிச்சவாயனாச்சே.
தன்மானத் தமிழர்களே 
தமிழ்நாட்டை அண்டை மாநிலத்திடம் 
அடகுவைத்துவிட்டு 
மலேசியாவில் மாடாய் உழைப்போம்
சிங்கப்பூரில் கக்கூஸ் கழுவுவோம் 
அரபு நாட்டில் ஒட்டகம் மேய்ப்போம்.

தமிழ்நாடு வாங்கலியோ தமிழ்நாடு.