Thursday 17 December 2015

என்ன ..........க்கு போராடுறோம்?




கேட்கவே கேவலமாக இருக்கிறது
பீப் சாங்
கேட்க நாதியற்றுக் கிடக்கிறது 
தமிழகத்தின் அரசியல்.

சர்வ சாதாரனமாக அரை டஜன் கெட்ட வார்த்தை இருக்கும் 
இளையோர்களின் அன்றாட உரையாடல்கள்.
கெட்ட படங்கள் பார்க்காத ஆளில்லை.
கெட்ட பேச்சு கேட்காத நாளில்லை
குடித்துவிட்டு அம்மணமாய் கிடந்து
பிள்ளைகளுக்கு முன்னாலேயே
சரளமாக கெட்ட வார்த்தை பேசும் நாம்
ஒரு பாட்டுக்காக போராடிக்கொண்டிருக்கிறோம்.

வரியாகக் கொடுத்த பணம் என்ன ஆனது?
வாழ்க்கை கொடுத்த வயல்கள் என்ன ஆயின?
வாய்க்கால்கள் கண்மாய்கள் ஏன் காணோம்?
ஆக்கிரமிப்பாளர்களை என்ன செய்தோம்?
செய்ய வேண்டிய அரசாங்கம்
கேட்பாரற்றுக் கிடக்கிறது.
இங்கே சிம்புவுக்கு எதிராக கோசமிட்டுக்கொண்டிருக்கிறோம்.
கெட்ட பாட்டு பாடிவிட்டாராம்.....

அவர்களின் அலட்சியத்தால் 
ஐநூறு பேரை இழந்திருக்கிறோம்
ஆடு மாடுகளை இழந்திருக்கிறோம்
பல்லாயிரம் கோடி நாசமாய்ப் போனது...
எவராவது அரசை எதிர்த்து போராடியிருப்போமா?
ஜட்டியில் படம் ஒட்டியவர் கைது – செய்தி
ஒட்டச் சொன்னவரும், இதுவரை ஒட்டியவர்களும்
ஏன் கைது இல்லை? மனம் கேட்டதா?
அனிருத்துக்கு எதிராக பொம்மை எரித்துக்கொண்டிருக்கிறோம்.
தமிழர்கள் முட்டாள்கள் என்பதை
மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருக்கிறோம்.

அழிவு அனைத்துக்கும் ஆதிகாரணமாகி
தண்ணீரில் கால் வைக்காமலேயே
உங்கள் துக்கம் எனது துக்கம் என்ற
'மக்களின் முதல்வரின்' கொச்சைப்படுத்தும் அறிக்கையைவிட
சிம்புவின் பாடல் எவ்வகையிலும் மோசமானது அல்ல.
என்ன  ..........க்கு போராடுறோம்?