Thursday 24 October 2013

அகம் பிரம்மாஸ்மி




இருக்குமிடமே சொர்க்கம்
இருப்பதில் எல்லாம் இறைவன்.
உணர்ந்தவன் உளமாற உதவுகிறான்.
மற்றவன் உண்டியலில் போடுகிறான்.

ஏழையின் கண்ணீர் தெரியாதவன் கண்களுக்கு
கடவுள் தெரியப்போவதில்லை.
மனிதனில் இறைவனைக் கண்டவன்
கடவுள்பற்றிக் கவலை கொள்வதில்லை.

வழிபாடுகளில் வாழ்க்கை நடத்தி
வாரமொருமுறை நோன்பிருந்து
வேண்டுதல் செய்ய மட்டும் கோயில் செல்லும்
பக்த கூட்டங்களை பரமன் ஒருபோதும் பார்ப்பதில்லை.

உள்ளத்தில் உறைபவனை உணர்ந்தவன்
காண்பதில் எல்லாமே கடவுளைக் காண்கிறான்.
காடு எரியும்போது தானும் எரிகிறான்.
அனாதை அழும்போது அவனும்  அழுகிறான்.



Monday 21 October 2013

வியந்து பார்க்கிறேன்...



கரும்பாறைக் கற்கள் காவல் நிற்க
காற்றை மட்டும் கரைதாண்டி
அனுப்பிக் கொண்டிருக்கிறது கடல்.
கொட்டிவிட்ட பால் போலே
அலைகள் நுரைகளாகி
பின்பு அலைகளாகவே மாறிடும் அதிசயம் நிகழ்கிறது.
பாறைகளில் பட்டுத்தெறிக்கும் நீர்
காற்றோடு கரைகிறது.
முகமெல்லாம் ஆச்சரியம்.
வாய் திறந்திருந்தாலும்
நாக்கு மட்டும் வெளிவராது பார்த்துக்கொள்கிறேன்.
வியப்பில் உவர்ப்பு இணைவதை
தவிர்க்கவே முயல்கிறேன்.
கடலின் பிரம்மாண்டத்தில் 
கடவுளை பிரம்மிக்கிறேன்.