Sunday, 28 July 2013

பெண்- பாவம்



குடிகாரக் கனவன்.
குடலைப்பிரட்டுகிறது வாடை.
'ஊரே கேட்கும்படி
உளறுகிறானே.
கொடுத்த சாப்பாட்டையும் 
கொட்டிவிட்டான்.
நான் என்ன செய்வேன்

உடல் பாழாய்ப் போயிடுமே'
சிந்தித்த சில வினாடிகளிலேயே
திடீரென எழுந்தான்.
அகோரப்பசியில் 
அவள்மேலே விழுந்தான்.
இரண்டு உடல்களும் பாழாய்ப்போயின.

பாவம் பெண்
'வலி'யோடே வாழ்க்கை நடத்துகிறாள்.

Saturday, 13 July 2013

சாந்தா மரியா

அப்போதுதான் வந்து சேர்ந்திருந்தேன்.
பல மாதப்பயணம் அது.
'யுரேகா! இந்தியாதான் இது' என
கொலம்பஸ் கொண்டாடிக் கொண்டிருந்தான்.
கையில் சிலுவை எடுத்து முத்தமிட்டான்

பார்த்திராத ஒன்று வந்திருப்பதாக 
பதுங்கி முன்னேறியது செவ்விந்தியக்கூட்டம்
விஷமேறிய அம்புகள் தாக்குதல் நடத்தத் 
தயாராகத்தான் இருந்தன.
குறிபார்க்குமுன்னே பிணக்குவியலாகிப் போயினர்.
தோட்டாக்கள் நிரம்பியிருந்த துப்பாக்கிகள்
குப்பிகளை மட்டும் துப்பிக்கொண்டிருந்தன.
கொஞ்சம் முன்புவரை நீலக்கடலில் நின்ற நான்
நிஜமாகவே நிறமாறிப் போனேன்.
மூழ்கிப்போனாலும் அழியாத செந்நிறம் அது.

வெற்றிக்களிப்பில் வெறி தணிந்தவர்களாய்
தாய்நாடு திரும்பினார்கள்
"தந்தையே இவர்களை மன்னியும்" என
மனம் நொந்து வேண்டுகையிலே
மீண்டும் அதே பயணம்
இன்னும் அதிக ஆயுதங்களோடு.
கொள்ளைநோய்ப் போர்வைகள் 
பொதிகளாய் அடுக்கப்பட்டிருந்தன.
போர்வீரர்கள் படைகளாய்த் திரண்டு வந்தனர்.
புதிதாக போதகர்கள் வேறு.

உயிர்கொல்லியாக போர்வைகளும் போர்வீரர்களும்
இனம்கொல்லியா போதகர்களும் 
நன்றாகவே போரிட்டனர்.
உரிமையாளர்களின் மொத்த அடையாளமும்
துடைத்தழிக்கப்பட்டன.
பிடுங்கிய நிலத்தை புதிய நாடெனப் பெயரிட்டனர்
உயிர் பிழைத்த ஒன்றிரண்டு செவ்விந்தியக் கழுத்துகளில்
தொங்கிக்கொண்டிருந்தார் இயேசு
கண்ணீரை மறைக்க கையின்றி.

காலனியாதிக்கத்தைக் கவனித்துப்பார்.
கொண்டுவரப்பட்டது வியாபாரம் மட்டுமல்ல
மதமும், மொழியும்தான்.
கொள்ளையிடப்பட்டது வளங்கள் மட்டுமல்ல
கலாச்சாரமும், சுயசிந்தனையும்தான்



சாந்தா மரியா
(கொலம்பஸ் பயணம் செய்த கப்பல் பெயர்)


Thursday, 4 July 2013

காதலும் சாதலும்



காதலிப்பது என்ன 
அவ்வளவு பெரிய குற்றமா?
ஆதி மனிதன்ஆரம்பித்து 
அன்றாட வாழ்வின் அடிநாதமே காதல்தானே!
ஆன்மீக இலக்கியங்களில் நுழைந்து
ஆராதனைக்கும் அர்ச்சனைகளுக்கும் மூலமே
இந்த காதல்தானே.

காதல் இல்லாமலா நீயும் நானும் பிறந்தோம்?

காற்றைப்போல நீக்கமற நிறைந்திருக்கும்
காதலுக்குக் கொள்ளி வைக்கும் 
கொள்ளைக்கார கூட்டமொன்று நம்மிடையே நடமாடுகிறது.

இவரைத்தான், இதற்குள்தான் என வட்டமிட
இந்தக் காவாளிகள் யார்?
இதோ இளவரசன் இறந்துவிட்டான்/ கொல்லப்பட்டான்.
அவன் செய்த பாவம் காதல்.
பாவம் - காதல்மேலா, காதலிப்போர்மேலா?


எத்தனையோ இளவரசன்களையும் இளவரசிகளையும்
இழந்துவிட்டோம்.
இளையோரே உஷார், உஷார்.
மீன்பிடிக்க உயிரிழக்கும் புழுபோல
மானம் காக்க நீ சாகிறாய், கொல்லப்படுகிறாய்.
எது பெரியது?
மானமா? உயிரா?
மானமாவது மயிராவது
உயிர்வாழத்தான் நீ பிறந்தாய்.

தாழ்த்தப்பட்டவன் கொல்லப்பட்டாலும்
காலனிகள் கொழுத்தப்பட்டாலும்
தாழ்ந்த குரலில்கூட எதிர்க்கத் தயங்கும்
இழிந்த என் இனமே
கொல்லப்பட்டவனுக்கும் ஒரே உயிர்தானே.

விழித்தெழு தோழா!
நாளை இதே நிலை உனக்கும் வரும்.
துணைக்கு யார் வருவார்?
தைரியமானவன் மட்டுமே காதலிக்க முடியும்
தைரியம் இருந்தால் மட்டுமே காதலி.
இழிந்த இந்த இந்திய சமூகத்தில்
காதலும் சாதலும் ஒன்றே.
ஆனாலும் சாகத்துணியாதே
வாழத்தானே காதலித்தாய்.
வாழ்ந்துகாட்டு.

Tuesday, 2 July 2013

மால்கம் எக்ஸ் - கனல் கருப்பன்


அடிமைத்தனம் நிறத்தில் தெரிவதால்
அருவருப்பு முகத்தில் தெரிக்கிறது.
அமெரிக்கா அழகானதுதான்
அழகாக்கியது அழுக்கு அடிமைகள்.
இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகள் வரை
இரண்டாம்தர குடிமக்களாக
இல்லை இல்லை
இருண்ட கண்டப் பிராணிகளாக
நடத்தப்பட்டனர்.
திமிறி எழுந்தவர்களெல்லாம் 
ரவைக்குப் பலியாகிப் போனதுதான் மிச்சம்.
தாடிக்கார லிங்கன் எடுத்த முயற்சி
பிரிவினைக்குத்தான் வித்திட்டது.
ஒட்டுவதற்கு அவன் கொடுத்த விலை
அமெரிக்க வரலாற்றின் மோசமான நிலை.

உரிமையா! அடிமைகளுக்கா?
ஹா ஹா ஹா ஹா நல்லாருக்கே கதை.
அப்டின்னா விவசாயம் செய்றது யாரு?
சுமை தூக்கி கட்டுமானம் செய்றது யாரு?
சாக்கட, குப்பையெல்லாம் நாமலா அள்ள முடியும்?
நம்ம வீட்ட நாமதான் பெருக்கி சுத்தம் செய்யனும்மா?
இது என்னயா கூத்து?

சட்டம் வழங்கிய உரிமைகள் பார்த்து 
சந்தி சிரித்தது.
வரிகளில் இருந்தால் போதுமா – அதற்கு
வாழ்வு கொடுக்கப் போவது யார்?
கர்ஜனைக்காகக் காத்திருந்தார்கள்
மியாவ் மியாவ் கருப்பர்கள்.
லூத்தர்கிங் கர்ஜனையில் அமைதி தெரிந்தது
மால்கம்-எக்ஸ் கர்ஜனை ஆத்திரம் தெளித்தது.
நோக்கம் ஒன்றாயினும் பாதைகள் தனித்தனி.
'அறைபவனுக்கு மறு கன்னத்தைக் காட்டு'
ஆதிக்க வெறிக்கு எதிரான போராட்டம்
கருப்புக்காந்தி லூத்தருடையது.
ஒரு கன்னத்தில் அறைந்தால்
இரு கன்னத்திலும் திருப்பி அடி.
வெள்ளையன் எவனுமே என்றுமே நல்லவனல்ல
இனத்திற்கு எதிரான போராட்டம்.
மால்கம்-எக்ஸ் கொஞ்சம் சூடாகவே மிரட்டினார்.

இயேசுவைப் போதிக்கும் போதகராய் இருப்பினும்
அவன் தந்தை சமூகத்தைத் தட்டிக்கேட்கத் தவறவில்லை.
அதனாலேயே கொல்லப்பட்டார்.
ஏழையாய், திருடனாய், ஏமாற்றுபவனாய்
கடத்தல்காரனாய் கைதியாய் இருந்தவன் எக்ஸ்.
ஆதிக்க இனமாய் இருந்த வெள்ளையரோடு
அல்லாஹ்வின் பெயரில் அறப்போர் நடத்தினார், 
அதைத் தீவிரமாய் நடத்தினார்.

கருப்பர்களின் கவலையற்ற வாழ்வுக்காய் 
இருப்பதையெல்லாம் இழந்தார்
பாவம்! வெள்ளாடுகள் சில செம்மறியாயும்
செம்மறிக்கூட்டத்தில் சில கருப்பாடுகளும் 
அவன் கண்களுக்குத் தெரியாமலேயே போய்விட்டன.

Friday, 28 June 2013

இதோ என் சீடர்





யார் என் தாய்?
யார் என் சகோதரி?
இறைச் சித்தம் நடப்பரே என் தாய்.
இவள் நடந்திருக்கிறாள்.
இதோ இருக்கும் இவள்
ஏதோ என்னைப் பெற்றதனால் மட்டும் அல்ல

இளமை முதலே இறைவனோடு இருந்தவள்
இன்னலிலும் இறைவழி நடந்தவள்
பணிவுதனைக் கொண்டிருப்பினும்
துணிவினை துணியாக உடுத்தியவள்
இல்லையென்றால், 
மலைநாடு போயிருக்க முடியுமா? இல்லை
மன்னனிடமிருந்து என்னைக் 
காப்பாற்றியிருக்க முடியுமா?
இறைத்திட்டம் இதுவெனத் தெரிந்தவுடன்
இது எப்படி ஆகும் என
குறுக்குக் கேள்வி கேட்டவளாயிற்றே.

அடிமையென்று குறுக்கிவிடாதே.


தாழ்ச்சி நிறைந்தவளாயினும்
தனியே நின்று சாதித்தவள்.
வலியைத்தாங்கும் வலிமை நிறைந்தவள்.
பைத்தியக்காரனாகிப் பிதற்றுகிறான் என
சுற்றத்தாரும் எட்டி நடக்கையில்
என்னோடு இருந்து என்னோடு உண்டு
என் பணி புரிய என் வழி நடந்து
எனக்காகவே உயிர் வாழ்ந்த ஜீவன் இவள்.

உதவி தேவை தெரிந்துவிட்டால்
உற்ற நேரம் உதவிடுவாள்
உரிய நேரம் இல்லை என்றால்
நல்ல நேரம் அதுவே என்பாள்.
அழைக்கப்பட்டவரும் தேர்ந்தெடுக்கப்பட்டவரும்
துணியையும் தூக்கி எறிந்து ஓடுகையில்
சிலுவை வரை இவளின் துணிச்சல் 
எனக்கே வியப்பளித்தது.
எனக்கு இவள் சீடரா
இல்லை குருவா?

Monday, 17 June 2013

வீதியோரம்...

போட்டிருந்த சட்டையை சரிப்படுத்திக்கொண்டேன்.
நகர்வலம் வர கால்கள் தயாராகியிருந்தன.
முக்கிய வீதிகளில் இறங்கி கட்டிட வனப்புகளை
கடந்து கொண்டிருந்தேன்.

வாசலுக்கு மட்டும் வழிவிட்டு
சாலையோரக் கடைகளோடே
வாழ்ந்து வந்த குடும்பங்கள் பல.
தார்ச்சாலையிலேயே துவையல்
தார்ச்சாலையிலேயே குளியல்
ஞாயிற்றுக்கிழமைச் சடங்குகள் இவை
வீதிகள் காலியாகக் கிடப்பதால்.
மாற்றிக்கொள்ளும் துணிகள்கூட
மரப்பலகையிலே அடுக்கப்பட்டிருந்தன.

குடியிருந்த யாருக்கும் கூரையில்லை
கூரையிருந்த குடிசைகள் ஒன்றோ இரண்டோ.
கண்ணாடிக்குள் இருந்த இயேசு முகமொன்றை
கரையான் பாதி அரித்திருந்தது.
இரட்டைச் சடையிட்ட பதின்வயதுப்
பருவப்பெண் ஒருத்தி
பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள்.
அவள் பள்ளி மாணவிதான்.
தோழிகள் முகவரி கேட்டால் என்ன சொல்வாளோ?

கடையின் வயர்களில் கனெக்சன் கொடுக்கப்பட்ட
பழைய டி.விப் பெட்டிகள்
வீதியில் நடப்போருக்கும் படம் காட்டின.
நடைபாதை வாழ்க்கையை கபலீகரம் செய்துவிட்டு
கற்பனையை மட்டும் தூண்டின.
பரபரப்புடன் பார்த்துக் கொண்டிருந்த
பரட்டைத்தலைப் பெரிசுகள்
பரவசமடைந்திருந்தன.

அடுத்த வீதி சென்றிருந்தேன்
கிடைத்த இடத்தில் எல்லாமே சாலைவீடுகள்.
காசு வைத்து கோலி விளையாடும்
சட்டையில்லா அழுக்குச் சிறுவர்கள். -மழை
விழுந்தால் மட்டும் நனையும் உடல்கள்
உரிந்தால் மட்டுமே நனையும் உடைகள்
சரளமாய் விழுந்த சென்னையின் செந்தமிழில்
நல்ல வார்த்தைகளைச் சலித்துதான் எடுக்க வேண்டும்.
அருகிலேயே அசிங்கங்கள் கிடக்க
விளையாட்டோ மும்மரமாகிக் கொண்டிருந்தது.
நடப்பவனுக்குத்தானே சீச்சீ
அங்கேயே இருப்பவனுக்கு என்ன!

பக்கத்து வீட்டில் பாத்திரம் முழுக்க
பிராய்லர் கோழித் தலைகளும் கால்களும்;.
கறிக்கடையின் எச்சங்களைக்
எங்கிருந்தோ வாங்கி கழுவிக்கொண்டிருந்தாள்.
'இன்னக்கி எங்க வீட்லயும் நான்-வெஜ்'
சோறு அடுப்பில் வெந்து கொண்டிருந்தது.
இரண்டு பாத்திரங்கள், தட்டுகள், ஒரு டி.வி
ஒன்றிரண்டு சாமிப்படங்கள், ஒரு தட்டுவண்டி.
இருந்த உடைகளும் களையப்பட்டு
காய்ந்து கொண்டிருந்தன.
இதுதான் ஒரு வீடு.

இவர்களின் வாழ்க்கையே இப்படித்தானா?
கேள்விகள் மனதைத் துளைத்தன.
எப்டியாவது ஒரு வீடு கட்டனும்
என்று எத்தனை எத்தனை தலைகள்
ரிட்டயர் ஆகும் வருடங்களை
வருடிக்கொண்டு வாழ்க்கை நடத்துகின்றன.

கடவுள்களுக்கும் கோயில்களுக்கு மட்டும் பஞ்சமில்லை
பாரத சமுதாயம் வாழ்கவே...



Tuesday, 4 June 2013

அண்ணே...ஒரு கட்டிங்

ஒற்றைச்சிறையாய் சில்லறையற்ற கடையாய்
ஊரின் மையப்பகுதியில்
அடேயப்பா...
கோயிலுக்கு இணையான கூட்டம்.
என்ன! ஆண்கள் மட்டுமே அனுமதி.


இங்கே வாடிக்கையாளர்தாம் உரிமையாளர்.
மக்களின் பணத்தில்
அரசு நடத்தும் சேவை மையம்.
கம்பி இடுக்குகளில்
கைகளும் காசுகளும் மட்டுமே தெரிகின்றன.
கல்லூரி போகாத விடலைகள்கூட
'அண்ணே... ஒரு கட்டிங்...'


ஏன் நீ மட்டும்தான் அடிக்கனுமா
என் காசு என் உடம்பு
மூடிக்கின்னு போயா...
பழகிப்போன பதில்களால்
கேள்வி கேட்க ஆளில்லை.
சின்னதும் பெரிசுமாய்
இடம் மாறும் பாட்டில்கள்
நீர்த்துப்போய் சதையோடு சங்கமிக்கின்றன.


 'இப்பதான் மச்சான் சந்தோசமா இருக்கேன்'
தரைதட்டுகிறது ஜில் பீர் பாட்டில்.
உற்சாகத்தோடு உளறியது
எதிர்கால இந்தியாவின் தூண் ஒன்று.
கடைசி மடக்கில் கைலாசம் போனவன் - தன்
கைப்பேசியிடம் கலந்துரையாடல் செய்கிறான்.

'சந்தோசமா இருக்காராம்...'
கெக்கே புக்கேவென சிரித்துவிட்டுச் சொன்னது
கீழே இறங்கிய பீர் பாட்டில்
விழுந்து கிடந்து பிராந்தி பாட்டிலிடம்.
"எத்தனை குடும்பத்த அழிச்சிருக்கோம்
எத்தனாயிரம்பேர கொன்னுருக்கோம்...
இவரு சந்தோசமா இருக்காராம்.


சாதாரண வாய்த்தகறாரைக்கூட
கொலை வரைக்கும் கொண்டுபோயிருக்கோம்.
வசதியானவங்களக்கூட ஓட்டாண்டியாக்கியிருக்கோம்
கூலி ஓட்டாண்டிகளையும்
குடிகாரனாக்கி குடும்பத்தையே ஒன்னுமில்லாம
ஆக்கியிருக்கோம்..
இவரு சந்தோசமா இருக்காராம்...


இவன் பேச்ச எவனும் மதிக்கப்போறதில்ல
தங்கச்சி இருந்தாகூட தவறா நடப்பான்
என்ன சொல்றோம்.. என்ன செய்றோம்னு தெரியாத
இவரு சந்தோசமா இருக்காராம்...


வேலைக்கிப்போற எல்லாரையும்
நமக்கு அடிமையாக்கிட்டோம்
அடுத்த தலைமுறைக்கான
சேமிப்பே இல்லாம ஆக்கிட்டோம்
குடிக்கிறது ஒன்னும் தப்பில்லனு
நல்ல பேரு வாங்கிட்டோம்
இவன் பணத்தை இவன வச்சே
கொள்ளையடிக்கிறோம்..
இவரு சந்தோசமா இருக்காராம்...


நடந்ததைப் பார்த்துப் புன்னகைத்தார்
சுவரில் மாட்டப்பட்டிருந்த முதலமைச்சர்.