Thursday, 9 April 2026

மதச்சார்பற்றவர்



சமயம் சொல்லியது

கட்டளைகளைக் கடைபிடியுங்கள் என.

இவர் சொன்னார்

என்னைப் பின்பற்றுங்கள் என.

அவரால் அதைச் சொல்ல முடிந்தது.


மானுடத்தைப் பிதுக்கி மலடாக்கிய

வாழ்வியலையும், வழிபாட்டையும்

பனிரெண்டு வயதிலேயே 

பேராலயப் பகுதியிலே பகுத்தறிந்தார்.

பாமரரின் பார்வையில்

சட்டத்தின் சாராம்சங்களைச் 

இமயத்தின் விசாலத்திற்கு

சமயம் வரும் வரை

சத்தமின்றி இட்டுச் சென்றார். 

ஏழைக்குத்தான் நற்செய்தி எனச் சொல்ல

எசாயாவைத் தேடிப் பிடித்தபின்

மூன்றே ஆண்டுகளில் புதிய

யுத்தமொன்றை விட்டுச் சென்றார்.

அதனால்தான்

தொழுநோயளரைத் தொட முடிந்தது

விலைமகளிர் இவரால் எழ முடிந்தது

பெரும்பாடுள்ள பெண் தொட விடிந்தது

சமாரியப் பெண் தவறை விட முடிந்தது

பெண்களும் பணியில் சேர முடிந்தது- இருண்ட

கண்களும் அவரைத் தேடத் திறந்தது.

ஒடுக்கப்பட்டோரோடு உறவு கிளைத்தது

ஒதுக்கப்பட்டோரோருக்கும் உணவு கிடைத்தது.

மத்தேயு மேசைவிட்டு எழுந்ததும் - உரோமைத்

தளபதி தலை கவிழ்ந்ததும் நடந்தேறின.

‘எல்லாம் முடிந்தது’ 

அவரால் எல்லாம் முடிந்தது.

-செ. ஜெயன்

Thursday, 2 April 2026

சிலுவை

எளிமையில் பிறந்த இறைமகனார்

சிலுவையில் மரித்த நிலையினைப் பார்

அன்பு மரணம்போல் வலியதுவே – பிறர்

துன்பம் களையும் மொழியதுவே

சிலுவையே மாபரன் தத்துவம், அது மட்டுமே மானிட மகத்துவம்


விரிந்த கரங்களின் ஆணிகள் அன்று

கிழித்த சதையின் வலியினைக் கொண்டு

பேரன்பின் வழியே பெரும்புரட்சி செய்தவர்

கள்வனின் கனவையும் கனிவுடன் கேட்டார்.

போதித்த நற்செய்தி போதுமென்ற மனதோடு

காயங்கள் மறந்து கடவுளை வேண்டினார்.

மரங்கள் வளர்ப்பது அறமாகும் - சிலுவை

மரம்தானே நமக்கெல்லாம் வரமாகும்.


ஏழைக்கு நற்செய்தி சொல்லிடும் சிலுவை

சேவைக்குத் தேவையாய் வந்திடும் சிலுவை 

பாவிக்குத் துணையாய் நின்றிடும் சிலுவை – விசாலப்

பார்வைக்கு இயேசுவைத் தந்திடும் சிலுவை

வேண்டும் பொருளாய் சிலுவை இருந்தால் 

காணும் துன்பம் கண்ணீராய் மாறும்

தீமை கண்டு கிளர்ந்து எழுவோம்

தினமும் சிலுவை சுமந்து நடப்போம்.