கருப்புப்பணம் இலஞ்சம் ஊழல் விவசாயம் தண்ணீர் தட்டுப்பாடு இயற்கைப் பேரழிவு இவையனைத்திற்கும் முடிவு தரும் மீட்பருக்காய் காத்திருக்கிறோம். திரையின் ஒளியில் மிளிரும் கலைஞன் உயிர் கொடுத்தாவது தீர்வு தருவான் என இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறோம். மாற்றங்களை ஏற்படுத்த வக்கில்லாத நாம் கோடீஸ்வர நடிகர்களுக்காய் வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க மங்கையரின் விசும்பலை நிறுத்த விரல்களை மடக்கி வீர வசனம் பேசி எதிரிகளைத் துவசம் செய்யும் திரைக் கூத்தாடிகள் என்பது அவர்களுக்குத் தெரியும். சண்டைக்காய் வாயிலிட்ட இரத்தத்தைத் துடைத்துக்கொண்டு அடுத்த ஷாட்டுக்குத் தயாராகிறார்கள். கலைஞனுக்கு காவிரியும்இ கருப்புப்பணமும் வருமானம் வாரித்தரும் கதைக்களம் அவ்வளவுதான். அடுத்த நாள் துருக்கியிலோஇ மெக்சிகோவிலோ நடனத்துக்கான இடம் தேடுவார். நீரின் அருமை தெரியாது குளங்களைஇ கால்வாய்களை ஆக்கிரமித்துக் கட்டிய வீடுகளில் வீணாகும் நீரை நினையாத நாம் தண்ணீர்ப் பஞ்சம் பற்றி பேசும் அட்டக்கத்தி தளபதிகளை தலையில் வைத்துக் கொண்டாடி சிலையெடுத்து சாமி கும்பிடும் மொன்னக்கத்தி மனிதர்கள் நாம். ஐந்தாண்டுகள் சினிமாவை முடக்குங்கள் தமிழகம் தழைத்தோங்கும் என ஆருடம் சொன்ன அண்ணன் பிரபாகரன் தீர்க்கதரிசிதான்
அப்போதுதான் குத்துவிளக்கு ஏற்றப்பட்டிருந்தது. அறையை விழுங்கி கொண்டிருந்த இருள் மெதுவாக வெளியேறிக்கொண்டிருந்தது. குத்துவிளக்கின் ஐந்து பக்கமும் ஒரே மாதிரி திரிதான் வைக்கப்பட்டிருந்தன. சுவாலைகள் சில நேரம் அழகான அசைவுகளோடு இடுப்பாட்டம் ஆடிக்கொண்டது. வேகமாகக் காற்று வீசும்போது வீரியமாக எழுந்து எரிந்தது. கரிகாலன் பாதங்களாய் கருமையை அடியில் கொண்ட மஞ்சள் நிற மேனியில் முகம் மட்டும் ஆரஞ்சு நிறத்தில் அதகளப்படுத்துகிறது. உச்சதந்தலைக் குடுமியாய் முடிவேயில்லாத சருமமாக உச்சிமீதேறிக் கொண்டிருந்தது கரும்புகை. இருளில்தான் ஆரம்பம் இருளில்தான் முடிவும் என்பதை காற்றில் கரைந்துகொண்டிருந்த வெளிச்சம் இருள் மண்டிய உலகிற்கு உணர்த்தியது. ஒரு நொடியேனும் நேரே நிற்கத்தெரியாது திரியின் நுனியில் தீ நடனமாடிக்கொண்டிருந்தது. எண்ணெய் இருக்கும்வரை எரியலாம் ஆனாலும் பிறவிப்பயனை அளித்துவிட்டுதான் அழிந்து போகின்றன திரிகள்.
கலைந்த கூந்தலோடு கனலாக எரியும் கண்களோடு வெண்ணாடைக்குள் ஒளிந்து கொண்டு விண்ணக தேவதை மண்ணகம் வந்தாள் மணிப்பூர் சென்றாள். இருப்பேனா இறப்பேனா என்ற பயமற்று உடலை மட்டும் வைத்து உலகையே உலுக்கி எடுக்கிறாள். இரோம் ஷர்மிளா இந்தியா மறந்துவிட்ட போராளி.
பறந்து திரியும் பட்டாம்பூச்சிபோல வாழத்துடிக்கும் வாலிபப் பருவத்தில் இராணுவச் சீருடைக்காரர்கள் வக்கற்ற சில்லறை மனிதர்களை வக்கிரத்தோடும் வன்முறையோடும் சீரழித்தது கண்டு சினந்து எழுந்தவள் வாளெடுத்துப் போரெடுக்க வழியில்லாது உடலையே ஆயுதமாக்க ஒரு டம்ளர் பழரசத்தோடு நிறுத்திக்கொண்டாள். பொதுவாக பழரசத்தோடு முடியும் உண்ணாவிரதம் இங்கே அப்படித்தான் ஆரம்பமானது. உதடுகள் உணவு தொட்டும் நாக்கில் ருசி பட்டும் வருடங்களாகிப்போனதால் வயிறு வறண்டுவிட்டது மாதவிடாய் நின்றுவிட்டது. சவக்கிடங்கு போவதற்குள் சாதிக்க வேண்டி சத்தியம் செய்து சகாராக் குழந்தைபோல சத்தில்லாது தினமும் செத்துக்கொண்டிருக்கிறாள். இந்த நோஞ்சானைக் கண்டு நொண்டியடிக்கிறது அரசு. தற்கொலை என்ற பெயரிலே சிறை வைக்கிறது. அறப்போராட்டத்தின் மதிப்பு காந்தியோடு புதைக்கப்பட்டுவிட்டதால் வெட்டியான் வேலை செய்யப்போவதில்லை நமது அரசியல்வாதிகள். குஞ்சுகளைக் காப்பாற்றும் தாய்க்கோழியாக போர்புரிய முனைந்து நகங்களைப் பயன்படுத்தினால் நக்சலைட்டுகளாக்கி கொன்றுவிடும் அவலநிலையை என்ன சொல்வது? கொலை செய்வதும், தற்கொலைக்குத் தூண்டுவதும் அரசின் கொள்கையே தவிர அதற்கு அப்பாவிகள் காரணமல்ல.
காளைகளுக்கு இல்லாதது கயல்களுக்கு மட்டுமே என காலங்காலமாய் கட்டமைக்கப்பட்ட கலாச்சாரக்கூறாகிவிட்டது கற்பு. கணவனை மட்டும் ‘கவனி’த்துக்கொள்வதும் அவனை மட்டும் நினைத்துக்கொள்வதுமா? காலையில் எழுந்து காப்பி கொடுப்பதும் கால்களில் விழுந்து ஆசி பெருவதுமா? கற்பின் வரையரை என்ன? நேர்மை தவறிய மதுரைக்காக – தன் மார்பைப் பிடுங்கிய கண்ணகி வாழ்க்கையில் தவறிய கணவனைக் கண்டு என்ன செய்தாள்? எப்படியும் இருந்துவிட்டு வருபவன் எப்போது வருவானோ என்று காத்திருக்கவேண்டும். இதுதானய்யா அடிமைத்தனம்? கடத்திய இராவணின் கைநிழல் படவில்லையெனினும் கட்டிய கணவன் கடிந்து விழுகிறான். ஆசை மனைவி அன்போடு பணிகையில் ஆக்கினை போக்க அக்கினியில் நடவென்கிறான். தீய்ந்தது அவ்எரி கற்பின் தீயினால் - ஆக எரித்திருக்க வேண்டும் தீயவனை. மனதில் நினைத்தவன் மரியாதை தந்தான் மணத்தில் இருந்தவன் இரணத்தில் மிதந்தான். இதுவரை நான் வாசித்ததேயில்லை ஆண் கற்பழிக்கப்பட்டானென்று. ஆணுக்கு கற்பில்லையா - இல்லை அழிக்கப்பட முடியாதொன்றா? கயிறுகள் மட்டுமல்ல கருத்துக்கள்கூட நம்மை கட்டியிருக்கலாம். கட்டவிழ்ப்போம்.
வாங்குறவங்க வாங்கலாம் பேரு சாயிரா வயசு பனிரெண்டு விலை ஆயிரம் ரூபாய். அவ்வளவெல்லாம் தேராது இந்தா ஐநூறு. தள்ளுபடி விலையில் என்னை வாங்கினான் என் தாய்மாமன். ஒரு மாதம் படுத்து படுத்து பாடாய்ப் படுத்தினான். தாகம் தீர்த்துவிட்டு இன்னொருவனிடம் தள்ளிவிட்டான். சதைக்கு ஏற்றவாறு சம்பளம் ஏத்திக்கேட்டான் மாமா. “அவனாவது நல்லா வச்சுக்கனும்” எனது வேண்டுதலை கடவுள் கண்டுகொள்ளவேயில்லை. அதே அடி, அதே அவஸ்தை. அடிமையாகத்தான் இருந்தேன். ஒருவேளை சோத்துக்காக அவனுக்கு என்னை சொர்க்கமாக்கி எனக்கு நானே நரகமாகிப்போனேன். ஆசை முடிந்ததும் அடுத்த ஆள் பார்த்தான். நல்ல விலைக்கு விற்றுவிட்டான். அவரோடு இருந்தது 24 ஆண்டுகள். எனக்கும் அவருக்கும் நாற்பதாண்டுகள் இடைவெளி. நான்காண்டுகள் முன் செத்துப்போனார். வயதாகிப்போனதால் என்னை வாங்க ஆளில்லை. இளமையும் வனப்பும் இருந்த வரையில் காஸ்ட்லியாய் இருந்தேன். இப்போது அடிமாட்டு விலைக்கு வீட்டுவேலை செய்ய விற்கப்பட்டேன். ஒருநாள் சாப்பாட்டுக்கு மட்டும் ஐநூறு ரூபாய் செலவு செய்யும் எனது பேத்தி. ஐநூறு ரூபாய் நோட்டைப் பார்க்கும்போதே நனைந்து விடுகிறது. இந்த ஐநூறு ரூபாயில்தானே எனது கனவும் வாழ்வும் அழிந்தது.
துடைப்பம் எடுத்துப் பெருக்கும்போது நான் புன்னகைப்பதில்லை. எனக்குத் தெரிந்து பெண்கள் பெருக்கும்போது பெருமிதம் கொள்வதில்லை. 'தூய்மை இந்தியா' முதன்முறை துடைப்பம் பிடிக்கும் கைக்கூலிகள் முகத்தில் என்ன சிரிப்பு, என்ன பெருமிதம்.. போட்டோ எடுக்கும் வரையிலும் அட அட.
வெளிநாடு சென்று வந்தவர்கள் வியப்பதும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் வெறுப்பதும் 'ஏன் இந்தியா இப்படி இருக்கிறது?' தூசிக்கும் துர்நாற்றத்திற்கும் பழக்கப்பட்டுவிட்ட நம் நாசிகள் ஏன் இப்படி என்று யோசிப்பதில்லை. அசிங்கங்கள் அருவருப்பைத் தராத வகையில் அழகாக கட்டமைக்கப்பட்ட கூறுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதார்த்தங்களும்.
ஒருநாள் கூத்துக்காய் விளக்குமாறு பிடிப்பது பிரதமருக்கு எளிது. பல்லாண்டு தயாரிப்போடு தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் சிறப்பு.
ஆழமாக சிந்திக்கவும் அவ்வப்போது சிரமப்படவும் அனைவரும் தயாராகும் வரையில் 'தூய்மை இந்தியா' ஏக்கப் பெருமூச்சுடன் களைவது நிஜம்.
விருந்தாவனம் விதவைகள் சரணாலயமிது. பராமரிக்கவும் சமாளிக்கவும் சங்கடப்பட்டு பரமன் பார்த்துக்கொள்வான் என பாரம் இறக்கிய பக்திமான்களின் தாய்கள், சகோதரிகள், சொந்தங்கள் இவர்கள். இருப்பதைப் பிடுங்கியபின் தொல்லையின்றி வாழ தள்ளிவிட்ட யமுனை நரகமிது. இங்கிருந்துதான் மோட்சத்துக்கு டிக்கெட் கொடுக்கிறார்கள் என்ற நம்பிக்கை வேறு. மாற்று ஆடையின்றி கொஞ்சம் கிடைக்கும் சோத்துக்காக வயது மறந்து ஓடி வயிறு கழுவும் அபலைகள் சவப்பெட்டியில் ஆயுள் முழுதும் ஆன்மீகச் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இறைபக்தி நிறைந்தவர்கள் அல்ல கோயில்தூண்களைத் துணையாக்கி கரம்கொடுக்க ஆளில்லாது கடவுளே கதி என கிடப்பவர்கள். வாரிவழங்கிய வாழை இலையாய் இருந்தவர்கள் விருந்துண்டபின்னே எறியப்பட்டு குப்பையில் விழுந்த எச்சில் இலைகளாகிப்போயினர். உள்ளம் முழுதும் நிறைந்தபின் பேச வழியின்றி அமுக்கி அமுக்கி கண்கள்வரை வந்துவிட்டதால் கண்ணீராய் வழியும் சோகங்கள். இவர்கள் செத்தாலும் அடுத்தவர் தொடுவதில்லை குப்பையாகவே அள்ளப்படும் நிலை. மாதா, சக்தி, தேவி, மாரி தெய்வங்கள் மட்டுமே இங்கு வாழ முடியும். விதவைகள் சாகக் காத்திருக்கிறார்கள்.
கோயில்கள் இறைவனின் நிழல் படிந்த இடங்கள். நிஜம் அங்கிருப்பதில்லை. இருக்கவும் முடியாது. இறைவனும் உருவமும் உயிரும் பிணமும் போல. ஒன்றிருந்தால் ஒன்றில்லை. நிஜமின்றிய நிழல் ஒரு முரண்தான் ஆனாலும் நிழலிலேயே நின்றுவிடுவது நியாயமுமில்லை. பிச்சை எடுப்பவர்களைக் கடந்து பிச்சை எடுக்கவே சந்நிதி நுழைவதால் நிஜம் பெரும்பாலும் விரும்பப்படுவதில்லை. அடையாளங்களைத் தாண்டி ஆண்டவனைத் தேடு. இங்குதான் எங்கோ இருக்கிறான்/ள். நிகழ்வுகளில், நபர்களில் உனக்குள்ளும் புறமும் எங்கும் இருக்கிறான்/ள். ஆனால் நிழல்களைத் தாண்டினால் மட்டுமே நிஜம் பரிச்சயம்.
கூட்டம் சுமாராக இருந்தது அந்த புறநகர் விரைவு வண்டியில். புத்தகம் படிப்பதும் புற அழகைப் பார்ப்பதுமாக எனது நேரம் சுருங்கிக்கொண்டிருந்தது. ஒரு தட்டு, இரு குச்சி, ஒரு அழுக்குப்பை அம்மாவும் அவளும் விரைந்து வந்த வண்டியிலும் விழாமல் நடந்து வந்தனர். பழக்கமாயிருக்கும். தரையில் அமர்ந்த அம்மா தட்டில் தாளம் தட்ட இரு இருக்கைக்கிடையே இருந்த சந்தில் பல்டி அடித்தாள், வளையத்தில் நுழைந்து வளைந்து நெளிந்து எழுந்தாள் அச்சிறுமி. அவளிடம் சோகமுமில்லை, புன்னகையுமில்லை. காரியத்திலே கண்ணாயிருந்தாள். ஐந்து நிமிடம் அப்படி இப்படி என ஆட்டம் காட்டிவிட்டு தட்டெடுத்து சில்லறைக்காய் நீட்ட அதுவரை இரசித்தவர்களுக்கு அவள் அந்நியமாகிப் போனாள். “பேரன்னப்பா?” எனது வினாவுக்கு விடையில்லை. ஏன் குழந்தைங்க பிச்சை எடுக்கனும்? விளையாட ஆசை இருக்காதா? உரிமையில்லையா? வாய்ப்புக் கிடைக்குமா? இல்லை இதுதான் விளையாட்டா? அறிவு ஆத்திரத்தோடு புலங்கியது. கொடுக்கவா வேண்டாமா என முடிவெடுப்பதற்குள் அடுத்த காட்சிக்கு அடுத்த பெட்டிக்குச் சென்றிருந்தாள்.
எப்படியெல்லாம் வாழ்ந்தோம் தெரியுமா? எப்போது கடைசியில் சிரித்தேனென்று ஞாபகமில்லை. இங்குதான் சாகவேண்டும் என ஆசை- ஆனால் படகேறி பக்கத்து நாட்டிற்குச் சென்று எப்படியும் வாழ்ந்து விடுவோமே என்றும் ஆசை. இருப்பதையெல்லாம் விற்றுவிட்டு வழி மறித்தவர்களிடம் வாரிக்கொடுத்துவிட்டு கள்ளத்தோணியில் காணாமல்போகவே உள்ளம் தயாராயிருந்தது. காற்றின் வேகம் குறையக் குறைய இதயத்தின் வேகம் அதிகமானது. எப்படியும் கரைசேர்த்திடு என கடவுளிடம் ஒற்றைக் கோரிக்கையே இருந்தது. இராணுவம் பிடித்துவிட்டால், புயலடித்தால், படகு கவிழ்ந்தால்? சும்மா இரு. எதுவும் நடக்காது. மனதின் ஆட்டம் படகின் அசைவைவிட வேகமாக ஆடியது. அகதிகளுக்கு நாட்டில் அனுமதில்லையாம் அரசு அதிகாரி சொல்லிவிட்டார். எத்தனையோ அகதிகளை ஆசுவாசமாய்த் தின்று ஏப்பம்விட்ட ஆழி எங்கள் படகுக்காக வாய் திறந்து காத்திருந்தது. கூட்டமாய்ப் பறந்த கடற்காகங்கள் போகிறபோக்கில் பொறாமை தெளித்துப் போயின. கடவுளே நாங்கள் கரையேற வழியே இல்லையா?
விபத்துகள் கடத்தல் கற்பழிப்பு காதல் கொலைகள் கலவரங்கள் இன்னும் பல்வேறு நிகழ்வுகள் வெறும் செய்திகளாய் மட்டும் கடந்து விடுமோ? உன் வீடு எரிந்தால்? உன் தங்கை இறந்தால்? நமக்கு நடந்தால் மட்டும்தான் தெரியவேண்டும் என்பதில்லை. இதயம் கொஞ்சம் நனைந்தாலே நாம் மனிதர்கள்தான்.
முன்புபோல் இல்லை உலகம் மாறிவிட்டது. மாற்றமில்லாமல் கிடக்கின்றன நமது வீடுகளும் எண்ணங்களும். காடுகளும் கழனிகளும் காலி மனைக் கட்டங்களாக மாறிப்போன காரணத்தாலே கடன் முடிக்கும் காலம் காலை இரவாய்ப்போனது. சாலைகளையும், இருப்புப் பாதைகளையும் இன்னும் எத்தனை நாள் நம்பியிருப்போம்? பலாத்கார பூமியில் பாதகர்கள் அங்கும் காத்திருக்கிறார்கள். பாவம் இவள் மரியாதைக்காக இல்லாவிட்டாலும் நின்றுகொண்டிருக்கிறாள். அறையிருந்தும் சிலர் அங்கே ஐந்து அறிவு ஜீவிகளாய். இருப்பிடத்தில் கழிப்பிடம் எப்போது இடம் பெரும்? குற்றவுணர்வு இல்லாமலேயே குடும்பம் நடத்துகிறோம். சீச்சீ...
பார்த்தேன் இரசித்தேன் பழகினேன் விரும்பினேன் காதல் என்று நினைத்துக்கொண்டேன். கட்டாயப்படுத்தியாவது அவள் என்னைக் காதலிக்க வேண்டினேன். அவள் எனக்குறியவள் என முடிவெடுத்திருந்தேன். என்னைத் தவிர யாரும் அவளை அண்டக்கூடாது என அடம்பிடித்தேன். ஆசைப்பட்டேன் மனைவியாக்க ஆசைப்பட்டேன். அவளுடைய எண்ணம், விருப்பு எதுவும் நான் வினவியதில்லை. அவள் எட்டியே நின்றாள். அவளின் கண்டுகொள்ளாமை என் கல்லான இதயத்தைக் கருங்கல்லாக்கியது. கத்தி, திராவகம், கல், கயிறு என எப்படி பழிவாங்கலாம் என நினைத்தேன். இதோ நினைத்ததை முடித்துவிட்டேன். என் உயிரையும் முடித்துக்கொண்டேன். நண்பா கவர்ச்சியின் தூண்டலில் காமத்தின் தூண்டிலில் கவனமாயிரு. இல்லாவிட்டால் இருப்பு வெறுப்பாகும் இழப்பு இரட்டிப்பாகும். சுதந்திரம் கொடுக்காதவன் அதை அனுபவிக்க உரிமை இல்லை. ஆசைகள் பேராசையாகி தொல்லைகள் வெறியாகும்போது இடம் வலம் வரும் காதலர்களும் ஆபத்தானவர்கள் என அறிவாய் தோழி.
மூன்று ஆண்டுகள் அவரோடு உண்டு உறவாடி யார் பிரிந்தாலும் நாம் இருப்போம் என்றவர்கள் கைது நடக்கும்போது ஒருவரைத்தவிர மற்றவர் ஏன் ஓட வேண்டும்? நகர்கள் பல சென்று நற்செய்தி அறிவித்த நண்பர் கூட்டம் கைதுக்குப் பிறகு என்ன ஆனது? புதுமைகளைக் கண்ட பலரும் புரட்சி செய்தாவது மனுமகனை மீட்டிருக்க வேண்டுமே. அப்பம் தின்ற ஐயாயிரம் பேர் எங்கே? எருசலேம் நகர் இயேசுவுக்குப் புதிதில்லையே அழுதுகொண்டிருந்த மகளிரின் மணவாளர்கள் எங்கு போனார்கள்? 'சிலுவையில் அறையும்' என கத்திய கூட்டத்தில் நல்ல மனிதர் யாருமில்லையா? தூக்க முடியாத சிலுவை திக்குமுக்காடிச் சுமக்கையிலே இரத்தம் மறைத்த கண்களில் நித்தம் கூடிய கூட்டம் நின்றதே விழுந்தபோது துப்புவதற்குப் பதில் தூக்கியிருக்கல்லவா வேண்டும். மீட்பரை மீட்பதற்கு மனிதர் யாருமில்லையெனில் மீட்பர் யாரை மீட்டார்? எதிலிருந்து மீட்டார்? எங்கோ தவறு நடந்திருக்கிறது.
மீண்டும் மீண்டும் யோசிக்கிறேன். யாரையும் சீண்டியதில்லை வம்பு தும்புக்குப் போனதில்லை. உதவி தேவையெனக் கண்டால் கேட்காமலேயே உதவுகிறேன். கண்ணெதிரே தவறு நடந்தால் தட்டிக்கேட்க துணிந்து நிற்கிறேன். பொது இடங்களில் எச்சில், குப்பை மட்டுமல்ல கண்டதும் கிடப்பது கண்டு கனன்று எழுகிறேன். செய்தித்தாள்களில் வன்முறை கண்டு மனம் நோகிறேன். ஒரு வேளை நா ரொம்ப நல்லவனா இருக்கேனோ?
வண்டிகள் வரிசையாய்க் காத்திருக்க விரைந்து வந்த விரைவு வண்டியைப் பார்த்து 'அங்க பாரு ட்ரெயினு' பரவசமாயின பேருந்துகள். குழந்தைகளின் குதூகலத்தில் பெருமையோடு இடம் கடந்தேன் இரயிலில். அடுத்த நிலையத்தில் வண்டி நின்றது. ஒரு மணிநேரம் நகரவேயில்லை. கிராஸிங்காம்... 'ச்சே... பேசாம பஸ்லயே போயிருக்கலாம்.'
பத்தாயிரம் ரூபாய் செல்மாடல்கள் பத்திரமாய் பையில் பதுங்கியிருக்க பளபளக்கும் இரண்டாயிரம் ரூபாய் சைனாக்காரி ஒரு கழிசடையின் கையில் சிக்கியிருந்தாள். விளங்காத வீர வசன ரிங்டோனை வீதியில் போவோரும் கேட்கலாம். இலவசப் பண்பலை போல இசை கலவரமாய் கிளம்பிக் கொண்டிருந்தது. அருவருப்புகளும் சாபங்களும் அவனை நோக்கியே தூவப்பட்டன. என் போனு ... நான் கேட்கிறேன் ஏகத்தாளமான சிந்தனையில் இருந்தான். ஒழுக்கத்தில் ஒன்றாம் வகுப்புகூட தேறாதவன்.
மங்கிய நிலவொளியில் மாடியறையிலே அங்கிருந்தார் இயேசு அன்புச் சீடருடனே செங்குருதி வடிந்தபின் சிலுவைமீதிலே தொங்கும் நினைவில் தொட்டெடுத்தார் அப்பமொன்று இரண்டாய்ப் பிட்டு இது என் உடலென்றார் இரசத்தை இது என் இரத்தமென்றார். அமைதியில் இரவு அற்பச் சுடராய் அசைந்தது. மேசைவிட் டகன்று மெலிதாய்ப் புன்னகையில் மேல்அங்கி அகற்றி இடைத்துண்டணிந்தே சீடரின் பாதத்தில் சிரம் தாழ்த்தியமர்ந்து நாடறியா வழக்கம்அது; நன்னீரால் கழுவினார். விழிநிறைத்த வியப்பை விழுங்க முடியாது விக்கி நிற்கையில் வாய்வரை வந்த வினாக்கள் வழியிருந்தும் வரப் பயந்தன. 'குருவென்றும் தலைவரென்றும் நீரெம்மை அழைக்கிறீர் நான் குருதான், தலைவன்தான். குருவும் தலைவனுமான நானே ஓரடிமைபோல் பாதங்கழுவி பணிவிடைசெய்தால் நீரும் அவ்வாறே செய்யும் பணியாளனே தலைவன்.' பேச்சு முடிந்தது செயல் இன்னும் பேசுகிறது.
அடிக்கடி சொல்ல வேண்டிய வாக்கியம் எப்போதாவது சொல்லப்படும் வாக்கியம் தவறான புரிதலின் முதலிடத்தில் ஐ லவ் யூ பிஞ்சுக்குழந்தைக்கு ஒரு முத்தம் சுட்டிப்பாப்பாவுக்கு ஒரு சாக்லேட் இளம்பெண்ணுக்கு ஒரு ரோஜா இணையானவளோடு ஒரு இறுக்கம் அன்பு கொடுப்பதில் உள்ளது. மலர்கள் மட்டுமல்ல, மரியாதையும்தான்.
மரத்தடியில் இரவெல்லாம் கட்டுண்டு பனியில் கருகிய இரு மலர்கள் காலையில் கசக்கிப் பிழியப்படும் சோகம். சாதி மாறி காதலிச்சது குத்தமாம் 25,000 பைன் போடுவாராம் கட்ட பணம் இல்லைனுதனால பொண்ண அனுபவிக்கலாம்னு தீர்ப்பு சொல்லுவாராம் நாட்டாமை. மங்கல்யான் முன்னெடுத்துச் செல்வதை - சில மிருகங்கள் பின்னோக்கித் தள்ளுகின்றன. மூடர்கூடமாய் இன்னும் இந்தியா. அசாத்திய கர்வத்தோடு கருவிகளும் கூனிக் குறுகி நிற்கும் மனிதர்களும். வளர்ச்சிக்காக ஏங்குகிறது தனிமனித ஒழுக்கமும் கலாச்சாரக் கூறுகளும். அசுர வளர்ச்சியில் வக்கிர புத்தி.
பிதுங்கிக்கொண்டிருந்த பேருந்தில் விரும்பி ஏறிக்கொண்டேன். மிச்சமாய்க் கிடைத்த ஏமாற்றத்தை கையில் மடித்துக்கொண்டு டிக்கெட் வாங்காமலே நின்றிருந்தேன். பத்து ரூபாய் சேமித்துவிட்ட சந்தோசம் சட்டென்று மறைந்தது. பரிசோதகன் எப்படித்தான் கண்டுபிடித்தானோ என்னை விடவே இல்லை. இருப்பதை எல்லாம் பிடுங்கிக்கொள்ள நூறு தண்டமாய்ப் போனது. தம்பி படிச்சவன்தானே...ஏம்ப்பா இப்படி? வழக்கமான அல்லக்கைகளின் வார்த்தைகளை விழுங்க முடியாது விக்கி நின்றது மனம். பரிசோதகனின் திறமையைப் பாராட்டினேன். கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும மெத்தப் படித்த நம் அரசியல் வியாபாரிகளும் கண்முன்னே நின்றனர்.