மங்கிய நிலவொளியில் மாடியறையிலே
அங்கிருந்தார் இயேசு அன்புச் சீடருடனே
செங்குருதி வடிந்தபின் சிலுவைமீதிலே
தொங்கும் நினைவில் தொட்டெடுத்தார் அப்பமொன்று
இரண்டாய்ப் பிட்டு இது என் உடலென்றார்
இரசத்தை இது என் இரத்தமென்றார்.
அமைதியில் இரவு அற்பச் சுடராய் அசைந்தது.
மேசைவிட் டகன்று மெலிதாய்ப் புன்னகையில்
மேல்அங்கி அகற்றி இடைத்துண்டணிந்தே
சீடரின் பாதத்தில் சிரம் தாழ்த்தியமர்ந்து
நாடறியா வழக்கம்அது; நன்னீரால் கழுவினார்.
விழிநிறைத்த வியப்பை விழுங்க முடியாது
விக்கி நிற்கையில்
வாய்வரை வந்த வினாக்கள் வழியிருந்தும்
வரப் பயந்தன.
'குருவென்றும் தலைவரென்றும் நீரெம்மை அழைக்கிறீர்
நான் குருதான், தலைவன்தான்.
குருவும் தலைவனுமான நானே
ஓரடிமைபோல் பாதங்கழுவி பணிவிடைசெய்தால்
நீரும் அவ்வாறே செய்யும்
பணியாளனே தலைவன்.'
பேச்சு முடிந்தது
செயல் இன்னும் பேசுகிறது.
அடிக்கடி சொல்ல வேண்டிய வாக்கியம்
எப்போதாவது சொல்லப்படும் வாக்கியம்
தவறான புரிதலின் முதலிடத்தில்
ஐ லவ் யூ
பிஞ்சுக்குழந்தைக்கு ஒரு முத்தம்
சுட்டிப்பாப்பாவுக்கு ஒரு சாக்லேட்
இளம்பெண்ணுக்கு ஒரு ரோஜா
இணையானவளோடு ஒரு இறுக்கம்
அன்பு கொடுப்பதில் உள்ளது.
மலர்கள் மட்டுமல்ல, மரியாதையும்தான்.
மரத்தடியில் இரவெல்லாம் கட்டுண்டு
பனியில் கருகிய இரு மலர்கள்
காலையில் கசக்கிப் பிழியப்படும் சோகம்.
சாதி மாறி காதலிச்சது குத்தமாம்
25,000 பைன் போடுவாராம்
கட்ட பணம் இல்லைனுதனால
பொண்ண அனுபவிக்கலாம்னு
தீர்ப்பு சொல்லுவாராம் நாட்டாமை.
மங்கல்யான் முன்னெடுத்துச் செல்வதை - சில
மிருகங்கள் பின்னோக்கித் தள்ளுகின்றன.
மூடர்கூடமாய் இன்னும் இந்தியா.
அசாத்திய கர்வத்தோடு கருவிகளும்
கூனிக் குறுகி நிற்கும் மனிதர்களும்.
வளர்ச்சிக்காக ஏங்குகிறது
தனிமனித ஒழுக்கமும்
கலாச்சாரக் கூறுகளும்.
அசுர வளர்ச்சியில் வக்கிர புத்தி.
எளிமையான வாழ்வு கொண்டு
தான் யாரென்றறிந்து
தனக்கொரு பாதையமைத்து
தனியொரு ஆளாய்த் தடம் பதித்தவன் அவன்.
நிலத்தில் கோடு கிழித்து
சாதிச் சகதியில் மூழ்கி எழுந்து
'நாங்க இருக்கோம்' துணிச்சலில்
எதுவும் செய்யத் துணிந்துவிட்டான்.
தான் யாரென மறந்துவிட்டான் இவன்.
பரிசேயத்தைப் பகைத்தாலும்
பரிசேயனை ஏற்றுக்கொண்டு
விரும்பி விருந்துண்டான்,
கல்லாகிப்போன இதயத்தின்
கசடு பிழிந்தான் அவன்.
விருந்துண்கிறான் இவனும்
கொடுப்பவனுக்கு ஆதரவும்
துறந்தவனுக்கு ஆதாயமும் தேவையானதால்.
பாடையைத் தொட்டான்
பிணத்தினைத் தொட்டான்
பார்வையற்ற கண்களையும்
தொழுநோய்ப் புண்களையும்
பரிவோடு தொட்டு பரிசுத்தமாக்கினான் அவன்.
'வெள்ளை அங்கி தொடாதே அழுக்கு'
பீடங்களைப் பெரிதாக்கி
தீண்டாமை தினம் வளர்க்கும் இவன்.
மங்கையரை மதித்தான்
சீடராக்கி மகிழ்ந்தான்.
விபச்சாரப் பெண்களையும்
அன்போடு அணைத்தான்.
ஏழையோடும் பாவியோடும்
இயல்பாக இருந்ததாலே
எண்ணிலாக் கொடுமைகளோடு
சிலுவையில் கொல்லப்பட்டான் அவன்.
அவன் ஆணாகிப்போனதால்
ஆணாதிக்க மதமாக்கி
நிறுவன சுகத்தில்
ஏழைகளை எடுபிடிகளாக்கி
குடிசைக்குள் குணிந்து செல்லவும்
தவறியோரைக் கனிந்து பார்க்கவும்
தவறிவிட்டான் இவன்.
உயிரையா கொடுப்பான்?
இருப்பதைப் பகிர்வதே ஏழ்மை
இயல்பான பாசமே கற்பு
ஈகோ விலக்குவதே கீழ்படிவு.
பிதுங்கிக்கொண்டிருந்த பேருந்தில்
விரும்பி ஏறிக்கொண்டேன்.
மிச்சமாய்க் கிடைத்த ஏமாற்றத்தை
கையில் மடித்துக்கொண்டு
டிக்கெட் வாங்காமலே நின்றிருந்தேன்.
பத்து ரூபாய் சேமித்துவிட்ட சந்தோசம்
சட்டென்று மறைந்தது.
பரிசோதகன் எப்படித்தான் கண்டுபிடித்தானோ
என்னை விடவே இல்லை.
இருப்பதை எல்லாம் பிடுங்கிக்கொள்ள
நூறு தண்டமாய்ப் போனது.
தம்பி படிச்சவன்தானே...ஏம்ப்பா இப்படி?
வழக்கமான அல்லக்கைகளின் வார்த்தைகளை
விழுங்க முடியாது விக்கி நின்றது மனம்.
பரிசோதகனின் திறமையைப் பாராட்டினேன்.
கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும
மெத்தப் படித்த நம் அரசியல் வியாபாரிகளும்
கண்முன்னே நின்றனர்.
மழிக்கப்பட்ட மண்டை
முடியப்பட்ட ஒரு கொத்து மயிறு
பூணூல் காட்டும் மார்பு
உருண்டு திரண்டு தொங்கும் தொந்தி
எண்ணெய் வடியும் தோல்
கொழுப்பேறிப் பிதுங்கும் சதை
புரியாத மொழியில் பூசை நடத்தும்
புரோகிதன் கொடுத்தால் மட்டும்
தாலி கட்டும் ஏழை மாப்பிள்ளை.
உன் இரத்தத்தையும் உழைப்பையும்
வாழ்க்கையின் வாய்ப்புகள் அனைத்தையும்
உறிஞ்சிக் குடித்த ஓநாயின் கரங்களிலிலா
உன் இல்லறம்?
சமர்ப்பயாமி என்றால் 'உன்னிடம் உள்ளதைக் கொடு'
ஸ்வாகா என்றால் 'பெற்றுக்கொண்டவன் விழுங்கி விடு'
பிடுங்குவதற்குத்தான் குண்டம் அமைக்கிறான்.
தெரிந்துகொள்.
திருமணச் சடங்கில்
நீ ஒரு பார்வையாளன்தான்.
ஒருபோதும் பங்கெடுப்பாளன் அல்ல.
தெளிவாகவே இருக்கிறான் அவன்
மூடனாக நீ இருப்பதால்.
சுரண்டுபவனுக்கும்
சுரண்டப்படுவனுக்குமிடையே உள்ள உறவு அது
கோயிலுக்குச் சென்றான் பக்தன்
திருப்பீடத்தில் பெருமையாக நின்றான்.
வருடம் ஒருமுறை புண்ணியத்தலம் செல்கிறேன்.
பிறந்த நாளில் ஆதரவற்றோர் இல்லம் செல்கிறேன்.
கோயிலுக்குக் கொட்டிக் கொடுத்திருக்கிறேன்.
ஏழைக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறேன்.
என் குடும்பம் நல்லா இருக்கனும்.
'உதவி செய்பவனாக அல்ல
உதவுபவனாக இரு.
இருப்பதால் கொடுக்கிறாய்
இல்லாதபோதும் கொடு.
காலம் பார்த்து கனிதராது
எப்போதும் இனிக்கும் சர்க்கரையாய் இரு.'
புன்னகையோடு கடவுள் சொன்னார்.