அடைமழைக்கயிறுகள் சாட்டைகளாகி
மண்ணை சவட்டுகின்றன
ஓங்கி வளர்ந்த பாதாம் மர இலைகள்
ஊடுருவும் நீரைத் தடுக்க முயல
முயற்சியில் வெற்றிகாணாது
வெறித்துப்பார்த்து கைவிரிக்கின்றன.
புதிதாக உருவான குட்டிக்குளங்களில்
விரைவாக விழும் பொட்டுத்துளிகள்
ஒரு நொடியில் உருண்டையாகி
மறுநொடியில் உடைகின்றன.
சில துளிகள் மட்டும்
பூமிப்பந்தாய் இடம்நகர்கின்றன.
சுற்றிவர நினைத்தும் சூரியன் இல்லாமையால்
மனம் வெதும்பி வெடிக்கின்றன.
அசைவற்ற செடிகள் உணர்வற்று உச் கொட்டி
வளர்ந்துவிட்ட அண்ணன்மார்களை
உதவிக்கு அழைக்கின்றன.
நனையக்கூடாது என்பதற்காகவே
கையைக் குடையாக்கி
கால்வைக்க இடம்தேடும் சிலரும்
எப்போது விடுமோ என
இடம், வலம் பார்த்து மழைசபிக்கும் இன்னும் சிலர்.
எப்போதோ விழ வேண்டிய
பாதிப்பழுத்த பழுப்பு இலைகள்
முன்மரண வேதனையில் கிளையோடு சண்டையிட்டு
முத்தமிடுகின்றன மண்ணை.
விழ மறுத்த சில இலைகள்
மறு கிளையில் தொற்றிக்கொண்டு
நமட்டுச்சிரிப்பு சிரிக்கின்றன
சாதித்துவிட்ட சந்தோசத்தில்.
ரசித்த மழையின் இருதுளி
என் கவிதையில் விழுந்து கரைபடுத்தியபோது
விரைந்து எழுந்தேன்
வலியோடு வந்த சாபத்தால்.
No comments:
Post a Comment