யார் என் தாய்? யார் என் சகோதரி? இறைச் சித்தம் நடப்பரே என் தாய். இவள் நடந்திருக்கிறாள். இதோ இருக்கும் இவள் ஏதோ என்னைப் பெற்றதனால் மட்டும் அல்ல இளமை முதலே இறைவனோடு இருந்தவள் இன்னலிலும் இறைவழி நடந்தவள் பணிவுதனைக் கொண்டிருப்பினும் துணிவினை துணியாக உடுத்தியவள் இல்லையென்றால், மலைநாடு போயிருக்க முடியுமா? இல்லை மன்னனிடமிருந்து என்னைக் காப்பாற்றியிருக்க முடியுமா? இறைத்திட்டம் இதுவெனத் தெரிந்தவுடன் இது எப்படி ஆகும் என குறுக்குக் கேள்வி கேட்டவளாயிற்றே. அடிமையென்று குறுக்கிவிடாதே.
தாழ்ச்சி நிறைந்தவளாயினும் தனியே நின்று சாதித்தவள். வலியைத்தாங்கும் வலிமை நிறைந்தவள். பைத்தியக்காரனாகிப் பிதற்றுகிறான் என சுற்றத்தாரும் எட்டி நடக்கையில் என்னோடு இருந்து என்னோடு உண்டு என் பணி புரிய என் வழி நடந்து எனக்காகவே உயிர் வாழ்ந்த ஜீவன் இவள். உதவி தேவை தெரிந்துவிட்டால் உற்ற நேரம் உதவிடுவாள் உரிய நேரம் இல்லை என்றால் நல்ல நேரம் அதுவே என்பாள். அழைக்கப்பட்டவரும் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் துணியையும் தூக்கி எறிந்து ஓடுகையில் சிலுவை வரை இவளின் துணிச்சல் எனக்கே வியப்பளித்தது. எனக்கு இவள் சீடரா இல்லை குருவா?
போட்டிருந்த சட்டையை சரிப்படுத்திக்கொண்டேன். நகர்வலம் வர கால்கள் தயாராகியிருந்தன. முக்கிய வீதிகளில் இறங்கி கட்டிட வனப்புகளை கடந்து கொண்டிருந்தேன்.
வாசலுக்கு மட்டும் வழிவிட்டு சாலையோரக் கடைகளோடே வாழ்ந்து வந்த குடும்பங்கள் பல. தார்ச்சாலையிலேயே துவையல் தார்ச்சாலையிலேயே குளியல் ஞாயிற்றுக்கிழமைச் சடங்குகள் இவை வீதிகள் காலியாகக் கிடப்பதால். மாற்றிக்கொள்ளும் துணிகள்கூட மரப்பலகையிலே அடுக்கப்பட்டிருந்தன.
குடியிருந்த யாருக்கும் கூரையில்லை கூரையிருந்த குடிசைகள் ஒன்றோ இரண்டோ. கண்ணாடிக்குள் இருந்த இயேசு முகமொன்றை கரையான் பாதி அரித்திருந்தது. இரட்டைச் சடையிட்ட பதின்வயதுப் பருவப்பெண் ஒருத்தி பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள். அவள் பள்ளி மாணவிதான். தோழிகள் முகவரி கேட்டால் என்ன சொல்வாளோ?
கடையின் வயர்களில் கனெக்சன் கொடுக்கப்பட்ட பழைய டி.விப் பெட்டிகள் வீதியில் நடப்போருக்கும் படம் காட்டின. நடைபாதை வாழ்க்கையை கபலீகரம் செய்துவிட்டு கற்பனையை மட்டும் தூண்டின. பரபரப்புடன் பார்த்துக் கொண்டிருந்த பரட்டைத்தலைப் பெரிசுகள் பரவசமடைந்திருந்தன.
அடுத்த வீதி சென்றிருந்தேன் கிடைத்த இடத்தில் எல்லாமே சாலைவீடுகள். காசு வைத்து கோலி விளையாடும் சட்டையில்லா அழுக்குச் சிறுவர்கள். -மழை விழுந்தால் மட்டும் நனையும் உடல்கள் உரிந்தால் மட்டுமே நனையும் உடைகள் சரளமாய் விழுந்த சென்னையின் செந்தமிழில் நல்ல வார்த்தைகளைச் சலித்துதான் எடுக்க வேண்டும். அருகிலேயே அசிங்கங்கள் கிடக்க விளையாட்டோ மும்மரமாகிக் கொண்டிருந்தது. நடப்பவனுக்குத்தானே சீச்சீ அங்கேயே இருப்பவனுக்கு என்ன!
பக்கத்து வீட்டில் பாத்திரம் முழுக்க பிராய்லர் கோழித் தலைகளும் கால்களும்;. கறிக்கடையின் எச்சங்களைக் எங்கிருந்தோ வாங்கி கழுவிக்கொண்டிருந்தாள். 'இன்னக்கி எங்க வீட்லயும் நான்-வெஜ்' சோறு அடுப்பில் வெந்து கொண்டிருந்தது. இரண்டு பாத்திரங்கள், தட்டுகள், ஒரு டி.வி ஒன்றிரண்டு சாமிப்படங்கள், ஒரு தட்டுவண்டி. இருந்த உடைகளும் களையப்பட்டு காய்ந்து கொண்டிருந்தன. இதுதான் ஒரு வீடு.
இவர்களின் வாழ்க்கையே இப்படித்தானா? கேள்விகள் மனதைத் துளைத்தன. எப்டியாவது ஒரு வீடு கட்டனும் என்று எத்தனை எத்தனை தலைகள் ரிட்டயர் ஆகும் வருடங்களை வருடிக்கொண்டு வாழ்க்கை நடத்துகின்றன.
கடவுள்களுக்கும் கோயில்களுக்கு மட்டும் பஞ்சமில்லை பாரத சமுதாயம் வாழ்கவே...
ஒற்றைச்சிறையாய் சில்லறையற்ற கடையாய் ஊரின் மையப்பகுதியில் அடேயப்பா... கோயிலுக்கு இணையான கூட்டம். என்ன! ஆண்கள் மட்டுமே அனுமதி. இங்கே வாடிக்கையாளர்தாம் உரிமையாளர். மக்களின் பணத்தில் அரசு நடத்தும் சேவை மையம். கம்பி இடுக்குகளில் கைகளும் காசுகளும் மட்டுமே தெரிகின்றன. கல்லூரி போகாத விடலைகள்கூட 'அண்ணே... ஒரு கட்டிங்...' ஏன் நீ மட்டும்தான் அடிக்கனுமா என் காசு என் உடம்பு மூடிக்கின்னு போயா... பழகிப்போன பதில்களால் கேள்வி கேட்க ஆளில்லை. சின்னதும் பெரிசுமாய் இடம் மாறும் பாட்டில்கள் நீர்த்துப்போய் சதையோடு சங்கமிக்கின்றன. 'இப்பதான் மச்சான் சந்தோசமா இருக்கேன்' தரைதட்டுகிறது ஜில் பீர் பாட்டில். உற்சாகத்தோடு உளறியது எதிர்கால இந்தியாவின் தூண் ஒன்று. கடைசி மடக்கில் கைலாசம் போனவன் - தன் கைப்பேசியிடம் கலந்துரையாடல் செய்கிறான்.
'சந்தோசமா இருக்காராம்...' கெக்கே புக்கேவென சிரித்துவிட்டுச் சொன்னது கீழே இறங்கிய பீர் பாட்டில் விழுந்து கிடந்து பிராந்தி பாட்டிலிடம். "எத்தனை குடும்பத்த அழிச்சிருக்கோம் எத்தனாயிரம்பேர கொன்னுருக்கோம்... இவரு சந்தோசமா இருக்காராம். சாதாரண வாய்த்தகறாரைக்கூட கொலை வரைக்கும் கொண்டுபோயிருக்கோம். வசதியானவங்களக்கூட ஓட்டாண்டியாக்கியிருக்கோம் கூலி ஓட்டாண்டிகளையும் குடிகாரனாக்கி குடும்பத்தையே ஒன்னுமில்லாம ஆக்கியிருக்கோம்.. இவரு சந்தோசமா இருக்காராம்... இவன் பேச்ச எவனும் மதிக்கப்போறதில்ல தங்கச்சி இருந்தாகூட தவறா நடப்பான் என்ன சொல்றோம்.. என்ன செய்றோம்னு தெரியாத இவரு சந்தோசமா இருக்காராம்... வேலைக்கிப்போற எல்லாரையும் நமக்கு அடிமையாக்கிட்டோம் அடுத்த தலைமுறைக்கான சேமிப்பே இல்லாம ஆக்கிட்டோம் குடிக்கிறது ஒன்னும் தப்பில்லனு நல்ல பேரு வாங்கிட்டோம் இவன் பணத்தை இவன வச்சே கொள்ளையடிக்கிறோம்.. இவரு சந்தோசமா இருக்காராம்...