விருந்தாவனம்
விதவைகள் சரணாலயமிது.
பராமரிக்கவும் சமாளிக்கவும் சங்கடப்பட்டு
பரமன் பார்த்துக்கொள்வான் என
பாரம் இறக்கிய பக்திமான்களின்
தாய்கள், சகோதரிகள், சொந்தங்கள் இவர்கள்.
இருப்பதைப் பிடுங்கியபின்
தொல்லையின்றி வாழ
தள்ளிவிட்ட யமுனை நரகமிது.
இங்கிருந்துதான் மோட்சத்துக்கு
டிக்கெட் கொடுக்கிறார்கள் என்ற
நம்பிக்கை வேறு.
மாற்று ஆடையின்றி
கொஞ்சம் கிடைக்கும்
சோத்துக்காக
வயது மறந்து ஓடி வயிறு கழுவும்
அபலைகள்
சவப்பெட்டியில் ஆயுள் முழுதும்
ஆன்மீகச் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
இறைபக்தி நிறைந்தவர்கள் அல்ல
கோயில்தூண்களைத் துணையாக்கி
கரம்கொடுக்க ஆளில்லாது
கடவுளே கதி என கிடப்பவர்கள்.
வாரிவழங்கிய வாழை இலையாய் இருந்தவர்கள்
விருந்துண்டபின்னே எறியப்பட்டு
குப்பையில் விழுந்த
எச்சில் இலைகளாகிப்போயினர்.
உள்ளம் முழுதும் நிறைந்தபின்
பேச வழியின்றி அமுக்கி அமுக்கி
கண்கள்வரை வந்துவிட்டதால்
கண்ணீராய் வழியும் சோகங்கள்.
இவர்கள் செத்தாலும்
அடுத்தவர் தொடுவதில்லை
குப்பையாகவே அள்ளப்படும் நிலை.
மாதா, சக்தி, தேவி, மாரி
தெய்வங்கள் மட்டுமே இங்கு வாழ முடியும்.
விதவைகள் சாகக் காத்திருக்கிறார்கள்.
கோயில்கள்
இறைவனின் நிழல் படிந்த இடங்கள்.
நிஜம் அங்கிருப்பதில்லை.
இருக்கவும் முடியாது.
இறைவனும் உருவமும் உயிரும் பிணமும் போல.
ஒன்றிருந்தால் ஒன்றில்லை.
நிஜமின்றிய நிழல் ஒரு முரண்தான்
ஆனாலும் நிழலிலேயே நின்றுவிடுவது நியாயமுமில்லை.
பிச்சை எடுப்பவர்களைக் கடந்து
பிச்சை எடுக்கவே சந்நிதி நுழைவதால்
நிஜம் பெரும்பாலும் விரும்பப்படுவதில்லை.
அடையாளங்களைத் தாண்டி
ஆண்டவனைத் தேடு.
இங்குதான் எங்கோ இருக்கிறான்/ள்.
நிகழ்வுகளில், நபர்களில்
உனக்குள்ளும் புறமும்
எங்கும் இருக்கிறான்/ள்.
ஆனால்
நிழல்களைத் தாண்டினால் மட்டுமே
நிஜம் பரிச்சயம்.
கூட்டம் சுமாராக இருந்தது
அந்த புறநகர் விரைவு வண்டியில்.
புத்தகம் படிப்பதும்
புற அழகைப் பார்ப்பதுமாக
எனது நேரம் சுருங்கிக்கொண்டிருந்தது.
ஒரு தட்டு, இரு குச்சி, ஒரு அழுக்குப்பை
அம்மாவும் அவளும்
விரைந்து வந்த வண்டியிலும்
விழாமல் நடந்து வந்தனர்.
பழக்கமாயிருக்கும்.
தரையில் அமர்ந்த அம்மா
தட்டில் தாளம் தட்ட
இரு இருக்கைக்கிடையே இருந்த சந்தில்
பல்டி அடித்தாள், வளையத்தில் நுழைந்து
வளைந்து நெளிந்து எழுந்தாள் அச்சிறுமி.
அவளிடம் சோகமுமில்லை, புன்னகையுமில்லை.
காரியத்திலே கண்ணாயிருந்தாள்.
ஐந்து நிமிடம் அப்படி இப்படி என
ஆட்டம் காட்டிவிட்டு
தட்டெடுத்து சில்லறைக்காய் நீட்ட
அதுவரை இரசித்தவர்களுக்கு அவள்
அந்நியமாகிப் போனாள்.
“பேரன்னப்பா?”
எனது வினாவுக்கு விடையில்லை.
ஏன் குழந்தைங்க பிச்சை எடுக்கனும்?
விளையாட ஆசை இருக்காதா?
உரிமையில்லையா? வாய்ப்புக் கிடைக்குமா?
இல்லை இதுதான் விளையாட்டா?
அறிவு ஆத்திரத்தோடு புலங்கியது.
கொடுக்கவா வேண்டாமா என
முடிவெடுப்பதற்குள்
அடுத்த காட்சிக்கு அடுத்த பெட்டிக்குச்
சென்றிருந்தாள்.
வானமென வாழ்க்கை
வரையரையின்றி விரிந்திருக்க
வாய்ப்புகள் விண்மீன்களாய்
எட்டாத தூரத்தில் கொட்டிக் கிடக்கும்.
வருமென்று தூண்டில் போட்டவர்கள்
காணாமல் போனார்கள்.
விரைந்திடும் மேகங்களாய்
நெருக்கடிகள் மறைக்கத்தான் பார்க்கும்.
மனது மங்கலாகும் வேளையில்
இருள் கண்டு மருளாதே
முண்டியடித்து முன்னேற
முறுக்கிடு மீசையை
பகலும் பௌர்ணமியும் நிச்சயம்.
உள்ளுக்குள்ளே பள்ளமிருந்தும்
உள்வாங்கி ஒளிகாட்டும் நிலவாய்
விருப்பமுடன் வழிகாட்டு நீ.
உன்னை நம்பியும் உயிர் இருக்கின்றன.
எப்படியெல்லாம் வாழ்ந்தோம் தெரியுமா?
எப்போது கடைசியில் சிரித்தேனென்று ஞாபகமில்லை.
இங்குதான் சாகவேண்டும் என ஆசை- ஆனால்
படகேறி பக்கத்து நாட்டிற்குச் சென்று
எப்படியும் வாழ்ந்து விடுவோமே என்றும் ஆசை.
இருப்பதையெல்லாம் விற்றுவிட்டு
வழி மறித்தவர்களிடம் வாரிக்கொடுத்துவிட்டு
கள்ளத்தோணியில் காணாமல்போகவே
உள்ளம் தயாராயிருந்தது.
காற்றின் வேகம் குறையக் குறைய
இதயத்தின் வேகம் அதிகமானது.
எப்படியும் கரைசேர்த்திடு என
கடவுளிடம் ஒற்றைக் கோரிக்கையே இருந்தது.
இராணுவம் பிடித்துவிட்டால்,
புயலடித்தால்,
படகு கவிழ்ந்தால்?
சும்மா இரு. எதுவும் நடக்காது.
மனதின் ஆட்டம் படகின் அசைவைவிட
வேகமாக ஆடியது.
அகதிகளுக்கு நாட்டில் அனுமதில்லையாம்
அரசு அதிகாரி சொல்லிவிட்டார்.
எத்தனையோ அகதிகளை
ஆசுவாசமாய்த் தின்று ஏப்பம்விட்ட ஆழி
எங்கள் படகுக்காக வாய் திறந்து காத்திருந்தது.
கூட்டமாய்ப் பறந்த கடற்காகங்கள்
போகிறபோக்கில் பொறாமை தெளித்துப் போயின.
கடவுளே நாங்கள் கரையேற வழியே இல்லையா?
விபத்துகள்
கடத்தல்
கற்பழிப்பு
காதல் கொலைகள்
கலவரங்கள்
இன்னும் பல்வேறு நிகழ்வுகள்
வெறும் செய்திகளாய் மட்டும்
கடந்து விடுமோ?
உன் வீடு எரிந்தால்?
உன் தங்கை இறந்தால்?
நமக்கு நடந்தால் மட்டும்தான்
தெரியவேண்டும் என்பதில்லை.
இதயம் கொஞ்சம் நனைந்தாலே
நாம் மனிதர்கள்தான்.
முன்புபோல் இல்லை
உலகம் மாறிவிட்டது.
மாற்றமில்லாமல் கிடக்கின்றன
நமது வீடுகளும் எண்ணங்களும்.
காடுகளும் கழனிகளும்
காலி மனைக் கட்டங்களாக
மாறிப்போன காரணத்தாலே
கடன் முடிக்கும் காலம்
காலை இரவாய்ப்போனது.
சாலைகளையும், இருப்புப் பாதைகளையும்
இன்னும் எத்தனை நாள்
நம்பியிருப்போம்?
பலாத்கார பூமியில்
பாதகர்கள் அங்கும் காத்திருக்கிறார்கள்.
பாவம் இவள்
மரியாதைக்காக இல்லாவிட்டாலும்
நின்றுகொண்டிருக்கிறாள்.
அறையிருந்தும் சிலர் அங்கே
ஐந்து அறிவு ஜீவிகளாய்.
இருப்பிடத்தில் கழிப்பிடம்
எப்போது இடம் பெரும்?
குற்றவுணர்வு இல்லாமலேயே
குடும்பம் நடத்துகிறோம். சீச்சீ...