Tuesday, 21 May 2013

பசுமையின் மடியில்...

குற்றால மலைத் தேனருவிக்கு
நண்பர்களின் அழைப்பில்
நடைப்பயணம் செய்தேன்.
எனக்கு முன்பாகவே அவர்கள்அங்கிருந்தார்கள்.
காலையும் மதியமும் சாப்பிடாததால்
எனக்கோ கொலைப்பசி.
கையில் சில பழங்களோடு
பசுமைக்காடு வழியே பயணமானேன்.
தனிமையும் தைரியமும்
மட்டுமே என்னோடு மலையேறின.
திடீர்ச் சத்தங்களில் பயம்
மெதுவாக எட்டிப் பார்த்தது.
ஒரு மணிநேர பயணத்திற்குப் பின்
செண்பக தேவி கோயில் தென்பட்டது.
அருகிலேயே அருவி இருந்தும்
அவர்கள் அங்கு இல்லை.
மூன்று மணிநேர பயணம் என்ற
அவர்களின் அலைபேசி வார்த்தைகள்
நினைவுக்கு வர,
வந்த வயோதிகரிடம் வழி கேட்டபின்
தொடர்ந்து நடந்தேன்.
குறுகலான பாதையில்
குருட்டாம்போக்கில்
பலமுறைப் பயணப்பட்டவன்போல
நடந்தேன்.
பாதையைப் பாறைகள் வழிமறிக்க
படாத பாடுபட்டுப்போனேன்.
வேர்கள் பிடித்தேன்
விழாதிருக்க விழுதுகள் பிடித்தேன்.
சருகுகள் வழுக்கிய பொழுதெல்லாம்
சாமி உதட்டில் வந்து போனார்.
மூன்று மணிநேரம் நடந்திருப்பேன்.
இரு பாறைகள் இணையுமிடத்தில்
சிறு'நீரே' வழிந்து கொண்டிருந்தது.
இதுதான் தேனருவியோ
தெரியவில்லை.
தெரிந்து கொள்ளவும் வழியில்லை.
அவர்கள் அங்கும் இல்லை.
மரணப்பாறைகளைக் கடந்து
தொடர்ந்து நடக்க எத்தனித்தேன்.
ஆனால் வலு இல்லை, பாதையும் இல்லை.
செங்குத்துப் பாறையில்
கிளை பற்றி ஏறுகையில்
எனக்கு முன்னே ஆறடி நீள பாம்புச் சட்டை.
பாம்பாகவே என் கண்களுக்குத் தெரிந்தன.
நொடிப்பொழுதில் செத்துப் பிழைத்தவனாய்
யப்பா! போதும்டா சாமி.
திரும்பி வந்திட வழி தேடினேன்.
வந்த வழியும் இல்லை, தப்பிக்க
எந்த வழியும் இல்லை.
அரைமணி நேரம் அலைந்திருப்பேன்.
பசித்த வயிறும் பயந்த கண்களும்
மனதை இன்னும் பயமுறுத்தின.
இருப்பினும் இயற்கை அழகாகத்தான் இருந்தது.
நான் இலக்கிய மாணவனாயிற்றே.
தட்டுத்தடுமாறி கீழருவி வந்து சேர்ந்தேன்.
கிடைத்ததில் இன்பங்கொண்டு நீராடுகையில்
அங்கேயே குடியிருக்கும் பாட்டி எச்சரித்தார்.
'தம்பி மேல ஒரு அருவி இருக்கு
சிறுத்தை எல்லாம் தண்ணி குடிக்க
அங்கதான் வரும்.
பாறைகள்ல விழுந்து நாலஞ்சி பேரு
செத்துருக்காக....போயிராதிய.'

சித்தரைத் தேடும் முயற்சியில் ஒரு
சீடரைக் கண்டு வினவிய என்
நண்பர்கள் குகைவிட்டு வெளிவந்தனர்.

அனுபவம் அழகாயிருந்ததால்
அவ்வளவாகத் திட்டவில்லை.

1 comment: